Monday, January 16, 2017

வக்காத்துக்குளம் - 3



டே..சதக்கா.. நீ ஓடி வரேக்க பொறகால ஒன்ட சூமட்டியப் பாத்துச் சிரிக்காளுஹள்ளோவ்..

என்றான் குண்டன்.. எனக்கு அதீத வெட்கமாகப் போய்விட்டது..  கேளாதவன் போல் மறுபடி தண்ணீருக்குள் மூழ்கினேன்..  சுழியோடி நீரடியில்... சிறிய வட்டக் கற்கள் பொறுக்கி மேலெழுந்து வந்து அவர்களை நோக்கி எறிந்தேன்.. சிறுமிகள் ஓட...  சன்முகமும்...  குண்டனும்..  நீரின் மேற்பரப்பில்...  மல்லாக்க நீந்தியபடியே...  கால்களை அடித்தடித்து. என்னை நோக்கி வந்தனர்..

மாமி..மாமி  பன்னாட.’  என்றான் குண்டன்.

மாமிர ஊட்ட போகாத..’- சண்முகம்.

சுண்டங் காயத் தின்னாத..

சூடெ ழும்பிச் சாகாதசாகாத..

மாமி..மாமி  பன்னாட..

டே..குண்டா..! மெய்யாமெய்யா என்ட சூமட்டியப் பாத்துட்டாளுஹளாடா..என்று கேட்டேன் தாளமுடியாத வெட்கமும் கோபமுமாய்..

நீ களிசனக் கழட்டக்குள்ளேயே பாத்துட்டாளுஹள்ளோவ்.என்றான் குண்டன்.

பாருவதியும் செவைதாவும் பாக்கல்ல.. மாலவெள்ளிதான் பாத்து அவளுஹளுட்டயும் காட்டினடா..என்றான் சன்முகம்.

மாலவெள்ளிக்கி ஊட்ட போகேக்க கிள்ளி உட்றன் பாரு’   கோபத்தில் எனக்குக் கண்ணீர் வந்தது.

எங்கடா சாந்தமாமா..?;’  கேட்டான் சண்முகம்.

அந்தா நீஞ்சிப் போறாண்டோவ்.. சாந்தமாமா..

சாந்தமா..மோவ்..

 சாந்தமாமா தார்ப்பாய்ச்சிக் கட்டிய சாறனுக்குள் காற்றுப் பந்து உற்பத்தியாக்கி  நடு ஆற்றின் குறுக்கே வேகமாக நீந்திப் போய்க் கொண்டிருந்தான்.

எங்கடா போறான்.. சாந்தமாமா..?’

தாமரக் கொட்ட ஆயப் போறான் மாலவெள்ளிக்கும்ää செவைதாக்கும் பாருவதிக்கும்..

சாந்தமாமா நாங்களும் வாரோ..ம்..

ஞ்ச வெராதங்கடா.. தண்ணி தாளம்.. தாமரப்பத்தைக்க பாம்பு இரிக்கிற..போங்கடா..

சாந்தமாமா அசாத்திய வேகத்துடன் நீந்திச் சென்றான்.  நட்டாற்றில் சென்ற சாந்தமாமா  சட்டென்று தண்ணீரிலிருந்து  நாலடி உயரத்திற்குத் தாவி உடம்பை வளைத்து அதே வேகத்தில்  தண்ணீரைக் கிழித்து  ஆழத்தில் உட்புகுந்து மறைந்தான். மேலே நீர்வட்டங்கள் அலைந்து அடங்கி வெகுநேரமாகச் சலனமற்றிருந்தது.  எங்களுக்குப் பயமாகி விட்டது.

எங்கடா அவன்..?’

குளியோடிப் போறான்..

எம்பட்டு நேரம்டா சாந்தமாமா மூச்சடக்கி.... ம்மாhடி..

சாந்தமாமாவைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டு   நானும் சண்முகமும் குண்டனும் எமது வழமையான விளையாட்டில் இறங்கினோம். கால்களைப் பின்னியபடி  படகுபோல ஆடினோம்.. நாங்கள் மூவரும் ... நீரில் முக்குளித்து மூழ்கி முங்கிமுங்கி அமிழ்ந்தெழுந்தோம்.  சண்முகம்   நடுவே  பாய்ந்து கீழாகி வந்து  மேலாகிக் கீழாகி கைகளைப் பொத்தியபடியே

ஈ ஒண்டு புடிச்சே...ன்..என்று கத்திச் சொல்ல-
என்ன ஈ..?’
சோல ஈ..
என்ன சோல..?’
மாஞ் சோல..
என்ன  மா..?’
அரிசி மா..
என்ன அரிசி..?’
குத்த ரிசி
என்ன குத்து.
பயில்வான் குத்து.

என்று இருகைகளையும் பொத்தி குண்டனின் முதுகில் குத்தினேன்.  சண்முகமும் பதிலுக்கு ஒரு குத்து கொடுத்தான்.  குண்டன்எண்டம்ம்ம்மோ..வ்.என்று கத்தியபடியே நீரில் அமிழ்ந்தான்.  இன்னும் சாந்தமாமாவைக் காணவில்லை.

குண்டா..குண்டா.. எங்கடா இன்னம் சாந்தமாமாவக் காணயில்ல..?’

அந்தா பாரு..

சாந்தமாமா ஆழக்கரையோரம் அடர்ந்திருந்த பிரப்பம் பற்றைகளுக்குள் சிக்கிக் கிடந்த தாமரைக் கொடிகளின் அடியில் தேடித்தேடி தாமரைக்கொட்டைகளும் சுக்கட்டிக் கிழங்குகளும் முள்ளிக்காய்களும் பறித்து  மடியில் நிரப்பியபடி வந்து கொண்டிருந்தான். நாங்களும் கரைக்கு அண்மித்ததாகச் சென்று இடுப்பளவு தண்ணீரில் நின்றுகொண்டிருந்தோம்.. நறுபுளிப் பற்றைகளுக்கப்பாலிருந்து_..வ்..வ்..ம்..என்று பாட்டுச் சத்தம் கேட்டது. நீளக்குளக்கட்டிலிருந்து  மாலைவெள்ளியும் சுபைதாவும் பார்வதியும் கோணல்குட்டிப் பாட்டம் கொடுத்தபடியே ஓடி வந்து கொண்டிருந்தனர்..

_....வ்..வ்..ம்..  ஈச்சோலே..ஈச்சோலே..

தும்பல..தும்பல..

பாக்கு வெத்துல..

பாக்கட்டி.. மாக்கட்டி.. பாக்கட்டி.. மாக்கட்டி.. பாக்கட்டி.. மாக்கட்டி..

டே.... சதக்கா அந்தா வாறாளுஹள்ளோவ்.. ஒண்ட சூமட்டியப் பாத்தாக்கள்..

நாங்கள் மூவரும் சிறுமிகளுடன்  யுத்தம் புரியத் தயாராகக் காத்திருந்தோம்.. சிறுமிகளின்    பாட்ட ஊர்வலம் நெருங்கியதும்

டியெய்.. மாலவெள்ளிப் பொருக்கி  மின்னிச் செவைதா.. கச்சக்கட்டுப்  பாருவதி.. நில்லுங்கடி..

என்னடா சூம்பக் குண்டா என்னடா..பாட்டம் நின்று  மாலைவெள்ளி கேட்டாள்.

ஏன்டி நீ சதக்காட சூமட்டியப் பாத்த நீ........?’

ஒஸிலேய்.. நான் பாக்கல்லடா.. வேள் பாருவதியான் காட்டின..

ஏன்டி காட்டின நீ  கச்சப் பாருவதி..?’

கடவுளே..... நான் காட்டல்லடா.. முண்டக்கண்ணா.. செவைதாதான்டா  முன்ன பாத்த..

ஏன்டி கறுப்பி  நீ முன்ன பாத்த..

ஒஸிலேய்.. நான் பாக்கல்ல.. என்ட கண்தான் பாத்த..மூன்று சிறுமிகளும் கிலீரெனச் சிரித்தனர்.. நாங்கள் ஒருசேர ஆத்திரமுற்று...  நிர்வாணத்தை மறந்து சட்டென இடுப்பளவுத் தண்ணீரை விட்டும் வெளியே பாய...

ச்சீய்.. ச்சீய்.. பார்ரியே.. உரியான் கொரங்குஹள..

என்ன கறுப்புடீ..

வெளக்குத் திரி..வெளக்குத் திரி..

சிறுமிகளின் நையாண்டிச் சிரிப்பில் வெட்கித்து விறுவிறுத்து தாக்குதல் முயற்சியைக் கைவிட்டு மறுபடி திரும்பி தண்ணீரில் பாய்ந்தோம்.. சரியான வெட்கமாகவிருந்தாலும் என்னுடையதை மட்டுமல்லாது இவர்கள் இருவருடையதையும் சேர்த்தே பார்த்துவிட்டார்கள் என்பதில் எனக்கு ஓரளவு திருப்தி ஏற்பட்டது. கரையில் நின்று கொண்டு.. சிறுமிகள்...

வாவண்டா.. வாங்களண்டா.என்று நக்கலாகக் கூப்பிட்டனர்.

          எங்களது களிசான்களை கம்பினால் தூக்கி நாயுருவிப் பற்றைக்குள் எறிந்தார்கள்.. நாங்கள் ஆத்திரமீக்குற்று ஆனால்,,, நிர்வாணம் காரணமாக கரையேறி ஒன்றும் செய்ய முடியாத ஆத்திரத்தில்..  தண்ணீரடியிற் சென்று மண்ணெடுத்து பலம் கொண்டெறிந்தோம்.

மூக்கோடி மாலவெள்ளி

“மாக்கொரட்டி... மாக்கொரட்டி....

கச்சக்கட்டுப் பாருவதி..

பொட்டிமூக்கி....”

மின்னிச் செவைதா.. கொட்டாண்ட  அறாமி...

அவர்களின் அத்தனை பட்டப் பெயர்களையும்  சொல்லி ஏசிவிட மட்டுமே  முடிந்தது...

சாந்தமாமா..சாந்தமாமா..

          சாந்தமாமா விரைவாக நீந்தி அருகில் வந்தான். மடிநிறைய தாமரைக்கொட்டைகள்.. முள்ளிக்காய்கள்.. சுக்கட்டிக் கிழங்குகள்.. தலைநிறைய சல்பேனியாச் சல்லுகள்..

ஏண்டா சண்ட புடிக்கிறீங்க..?’

இவளுஹளுக்கு ஒண்டும் குடுக்கப்போடா  சாந்தமாமா..

ஏன்டா..?’

இவன்ட சூமட்டியப் பாத்துட்டாளுஹள் சாந்தமாமா..

ச்சீய்ய்..சாந்தமாமா சிரித்தான்.

சாந்தமாமா.. எங்களுக்கும் தாவன்..

குடு;க்காத..குடுக்காத..

சாந்தமாமா விரைவாகக் கரையேறி சிறுமிகளுக்கும் நிறையக் கொடுத்தான். நாங்கள் பொறாமையுடன் செய்வகையற்றுப் பார்த்துக் கொண்டிருந்தோம்.. ஆத்திரமாகவிருந்தது.. ஆனால் கரையேற வழியில்லை..

சாந்தமாமா..சாந்தமாமா.. எங்கட களிசனை எடுத்துத் தாவன்..

எங்கடா..?’

ப்ப எடுக்காத சாந்தமாமா.. நாங்க போனத்துக்குப் பொறகு எடுத்துக் குடு..

சிறுமிகள் சொல்லிவிட்டு தமது பங்குகளைப் பெற்றுக் கொண்டு ஓடினர்.. சாந்தமாமா எங்கள் களிசனை எடுத்துத் திரும்பிய போது  குண்டனைக் காணவில்லை.. குண்டன் திடீர் நீர்ச்சுழியில் அகப்பட்டு  கத்தவும் வழியில்லாது தலைகீழாக ஆற்று வெள்ளத்தில் இழுபட்டுப் போய்க் கொண்டிருந்தான்..
நாங்கள் கத்தினோம்..

ச..சாந்தமா..மா..மாமா.. அந்தா   கு..குண்ட..டன்..

குண்டன் தாண்டுட்டான்... குண்டன்..தாண்டுட்டான்..

           எமது கூக்குரலில்.... சாந்தமாமா திடுக்கிட்டு... பின் சட்டென... அதிவேகத்தில் கரை நெடுக ஓடி வளைந்திருந்த தென்னைமரத்தில்... ஓடியேறி பத்தடி தாவி...  குண்டன் இழுபட்டுப்; போய்க்கொண்டிருந்த இடத்தில் அசுர வேகத்தில்  விசுக்கெனப் பாய்ந்தான். இனிக் குண்டன் தப்பிவிடுவான்.


No comments:

Post a Comment